

இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு வசித்து வந்த தீன் மூர்த்தி பவன் அவரது மறைவுக்கு பிறகு நேரு நினைவாக அருங்காட்சியகம் மற்றும் நூலகமாக செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தீன் மூர்த்தி பவனில் அனைத்து முன்னாள் பிரதமர்களுக்கும் அருங்காட்சியகம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் கடும் ஆட்சேபம் தெரிவித்து உள்ளார். நேரு நினைவிடத்தில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்று வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி இருப்பதாவது:-
மறைந்த பிரதமர் நேருவின் பாரம்பரியம் மற்றும் வரலாறுகளுக்கு மதிப்பளித்து எந்தவித இடையூறும் செய்யாமல் அவரது நினைவு வளாகத்தை விட்டு விட வேண்டும். நேரு காங்கிரசை மட்டும் சார்ந்தவர் கிடையாது. ஒட்டு மொத்த இந்தியாவுக்கு சொந்தமானவர்.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூட நேரு அருங்காட்சியகத்துக்கோ, நூலகத்துக்கோ எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. இந்த அரசுக்கு அதில் மாற்றம் ஏற்படுத்துவது ஒரு கொள்கையாக இருப்பது வருத்தம் அளிக்கிறது.