பொதுமக்களுக்கு ஆதரவாக கதிராமங்கலத்தில் மாணவர்கள் போராட்டம்

கதிராமங்கலத்தில் பொதுமக்களுக்கு ஆதரவாக கும்பகோணத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கதிராமங்கலம் பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
கதிராமங்கலம் பொதுமக்களுக்கு ஆதரவாக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி
Published on

தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் இருந்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் வெளியேறக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவர்களை எந்த நிபந்தனையும் இன்றி விடுதலை செய்ய வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களை விடுவிக்க கோரியும், சமையல் கியாஸ் இல்லாமல் சமைக்க முடியும் என்பதை வலியுறுத்தியும் கிராம மக்கள் ஊரில் இருந்து வெளியேறி அங்குள்ள அய்யனார் கோவில் தோப்பில் குடியேறி வருகிறார்கள்.

நேற்று 2-வது நாளாக தோப்பில் குடியேறினர். அங்கேயே விறகு அடுப்பில் சமையல் செய்து சாப்பிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களுக்கு ஆதரவாக கும்பகோணம் பகுதி மாணவர்கள் கதிராமங்கலத்திற்கு சென்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதற்கிடையே கதிராமங்கலம் மாணிக்க நாச்சியார்கோவில் முதல் திரவுபதியம்மன் கோல் வரை பிரதான சாலையில் 50-க்கும் மேற்பட்டோர் குடிநீரின்றி அவதிப்படுவதாக சில நாட்களுக்கு முன் கலெக்டரிடம் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை முறையான குடிநீர் கிடைக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டினர். குடிநீர் கேட்டு ஓரிரு நாட்களில் பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என அவர்கள் கூறினர்.

பந்தநல்லூர் சாலையில் 35-ம் எண் கொண்ட எண்ணெய் கிணற்றிலிருந்து வெளியான கச்சா எண்ணெய் கசிவால் ஸ்ரீராம் என்பவர் வயல் பாதிக்கப்பட்டது.

இதற்கு இழப்பீடாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அவருக்கு ரூ. 59 ஆயிரத்து 635-க்கு இழப்பீடு காசோலையை அனுப்பி உள்ளது. ஆனால் வயலில் தேங்கி உள்ள கச்சா எண்ணெய் மழை காரணமாக மற்ற வயல்களுக்கும் பரவும் அபாயம் உள்ளதால் அதற்கு தீர்வு காண வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com