ஐ.எம்.ஏ.பண மோசடி - குமாரசாமியிடம் விசாரிக்க சிபிஐ முடிவு

ஐ.எம்.ஏ. பண மோசடி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமியிடம் சிபிஐ விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
குமாரசாமி
குமாரசாமி
Published on

பெங்களூர்:

பெங்களூரை சேர்ந்த ஐ.எம்.ஏ. நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் பணத்தை மோசடி செய்தது.

40 ஆயிரத்துக்கு மேற்பட்டோரிடம் இந்த நிறுவனம் ரூ.2 ஆயிரம் கோடி நிதி மோசடி செய்து உள்ளது. இந்த மோசடி கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த மோசடி குறித்து சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. ஐ.எம்.ஏ. குழுவின் தலைவர் முகமது மன்சூர்அலிகான் கடந்த மாதம் 21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரிடம் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இந்த மோசடி விவகாரம் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து மாநில அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்த மோசடி குறித்து 20 ஆயிரம் பக்கம் கொண்ட ஆவணங்கள் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த மோசடி விவகாரம் தொடர்பாக கர்நாடகா முன்னாள் முதல்-மந்திரியும், மதசார்பற்ற ஜனதாதள தலைவருமான குமாரசாமியிடம் சி.பி.ஐ. விசாரணை நடத்தலாம் என்று தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பு தேர்தல் செலவுக்காக குமாரசாமிக்கு 3 நபர்கள் மூலம் ரூ.5 கோடி பணம் கொடுத்ததாக அந்த நிறுவனத்தின் உரிமையாளர் தெரிவித்து இருக்கிறார். இந்த தகவல்கள் ஆவணத்தில் இடம் பெற்றுள்ளன. இதன் அடிப்படையில் குமாரசாமியிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. திட்டமிட்டு உள்ளது.

இதேபோல முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் அலோக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது. அலோக்குமார் தன்னிடம் ரூ.25 கோடி கேட்டதாக மன்சூர் அலிகான் விசாரணையின் போது தெரிவித்து இருந்தார்.

இதேபோல பா.ஜனதா தலைவர் சுப்பிரமணிய நாயுடுவும் ஐ.எம்.ஏ. நிறுவனத்திடம் பணம் பெற்று இருக்கிறார். நிஜா முதீன் என்பவர் மூலம் அவர் பணம் பெற்றதாக கான் தெரிவித்து இருக்கிறார். இதனால் அவரிடம் சி.பி.ஐ. விசாரிக்கிறது.

இதுதவிர மேலும் 13-க்கும் மேற்பட்ட அதிகாரிகள், அரசியல்வாதிகள் ஆகியோரிடம் இந்த மோசடி தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com