

சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
மத்திய பா.ஜ.க. அரசு சமீபத்தில் நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களால் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதாரவிலை
பறிக்கப்பட்டுள்ளது. இனி விவசாயிகளின் விளைபொருட்கள் விலையை கார்ப்பரேட் நிறுவனங்கள் தான் முடிவுசெய்யும் என்கிற நிலை
ஏற்பட்டிருக்கிறது. இதை எதிர்த்து பஞ்சாப், அரியானா, மராட்டியம், கர்நாடகா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் கடுமையான போராட்டம்
நடத்தி வருகிறார்கள்.
வேளாண் சட்டங்களை எதிர்த்து கொழுந்துவிட்டு எரியும் போராட்ட சூழலில் விவசாயிகள் வாங்கிய கடனுக்கு வட்டியையும், அபராத வட்டியையும்
உடனடியாக தள்ளுபடி செய்யவேண்டும். அப்படி தள்ளுபடி செய்யப்படவில்லையெனில் மத்திய பா.ஜ.க. அரசுக்கு எதிராக விவசாயிகளை திரட்டி
கடுமையான போராட்டத்தை நடத்தவேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்க விரும்புகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.