வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்: கே.என்.நேரு அறிக்கை

சொத்து வரி உயர்வை கண்டித்து வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
வருகிற 27-ந்தேதி திருச்சி மாவட்டத்தில் தி.மு.க. ஆர்ப்பாட்டம்: கே.என்.நேரு அறிக்கை
Published on

திருச்சி:

முன்னாள் அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான கே.என்.நேரு எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் சொத்து வரி 50 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை திடீரென உயர்த்திய அ.தி.மு.க. அரசு மக்களை பேரதிர்ச்சியில் உறைய வைத்திருக்கிறது.

எனவே கடுமையான இந்த சொத்து வரி உயர்வை கண்டித்தும், அதனை திரும்ப பெற வலியுறுத்தியும், வருகிற 27.7.2018 (வெள்ளிக்கிழமை) அன்று காலை 10 மணியளவில் திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை, துவாக்குடி நகராட்சி, மணப்பாறை நகராட்சி, துறையூர் நகராட்சி ஆகிய நகராட்சி அலுவலகங்கள் முன்பு (காவல்துறை அனுமதிக்கும் இடம்) திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற இருக்கிறது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, மாநகர கழக நிர்வாகிகள், அனைத்து ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், கிளைக்கழக செயலாளர்கள், முன்னாள், இந்நாள் சட்ட மன்ற உறுப்பினர்கள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் கழக முன்னோடிகள், செயல்வீரர்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு இக்கண்டன ஆர்ப்பாட்டத்தை மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அவர்கள் அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com