ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பீகார் பெண்ணுக்கு 7 ஆண்டு ஜெயில்

கேரளாவில் இருந்து ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த பீகார் பெண்ணுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து கொச்சி என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
யாஸ்மின் முகமத் சாகித்
யாஸ்மின் முகமத் சாகித்
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் காசர் கோடு, கண்ணூர் மாவட்டங்களில் இருந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வளைகுடா நாடுகளுக்கு சென்ற 15-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், இளம்பெண்களும் மாயமானார்கள்.

இதுகுறித்து மாயமான இளைஞர், இளம்பெண்களின் உறவினர்கள் கொடுத்த புகாரின்பேரில் கேரள போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாயமான இளைஞர்களில் சிலர் ஆப்கானிஸ்தானில் செயல்படும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் இணைந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்காக கேரளாவில் சிலர் ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து தேசிய புலனாய்வு அமைப்பு இந்த புகாரை விசாரிக்க தொடங்கியது.

தேசிய புலனாய்வு அமைப்பு கேரளா மற்றும் டெல்லியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதில் கேரளாவில் இருந்து ஐ.எஸ். அமைப்பிற்கு ஆள் சேர்க்கும் பணியில் ஈடுபட்ட முக்கிய பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஆப்கானிஸ்தானிற்கு தப்பிச்செல்ல இருப்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து டெல்லி விமான நிலையத்தில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் 30-ந்தேதி அந்த பெண்ணை கேரள போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அந்த பெண் தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்.

தேசிய புலனாய்வு அமைப்பு நடத்திய விசாரணையில் அந்த பெண், பீகார் மாநிலத்தைச் சேர்ந்த யாஸ்மின் முகமத் சாகித் என தெரிய வந்தது. இவர் மீது கொச்சியில் உள்ள என்.ஐ.ஏ. கோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

இதில் சாட்சிகள் விசாரணை முடிந்ததை தொடர்ந்து இன்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

இதில், குற்றம் சாட்டப்பட்ட பீகார் பெண் யாஸ்மின் முகமத் சாகித்துக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். கேரளாவில் ஐ.எஸ். அமைப்புக்கு ஆள் சேர்த்ததாக எழுந்த புகாரில் தண்டனை விதிக்கப்பட்ட முதல் வழக்கு இதுவாகும். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com