திருவனந்தபுரம்:
கடந்த வாரம் கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான ஒக்கி புயல் குமரி மாவட்டம், கேரளாவின் தெற்கு பகுதியில் உள்ள கடலோர மாவட்டங்கள், லட்சத்தீவு பகுதிகளில் பலத்த சேதத்தை உண்டாக்கியது. தற்போது, அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயலினால் மராட்டியம், குஜராத் மாநிலங்களில் கனமழை பெய்து வருகின்றது.
கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் இந்த புயல் காரணமாக காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டு மராட்டியம், குஜராத் மாநிலங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இருப்பினும், புயலின் கோர தாக்குதலால் அதிகளவிலான படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேற்று வரை கேரளாவில் மட்டும் 31 மீனவர்கள் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய் நிவாரண தொகையாக வழங்கப்படும் என கேரள அரசு அறிவித்துள்ளது. காணாமல் போன மீனவர்களை தேடும் பணியில் கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.