

கரூர்:
மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் ‘நீட்’ பொது நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் திட்டமிட்டபடி இன்று நடைபெற இருக்கிறது. இந்தியா முழுவதும் 3,842 மையங்களில் 15.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். தமிழகத்தில் 14 நகரங்களில் அமைக்கப்பட்டுள்ள 238 தேர்வு மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
தேர்வுக்கு வரும் மாணவர்கள் இரண்டரை மணி நேரம் முன்பாக தேர்வு மையத்திற்கு வரும்படி அறிவுறுத்தப்பட்டு அதன்படி மாணவர்கள் 11 மணியில் இருந்து தேர்வு மையங்களுக்கு வரத் தொடங்கினர். மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு தனி அறையில் தேர்வு எழுத ஏற்பாடு செய்யும்படி மத்திய அரசு கூறி உள்ளது.
இந்நிலையில், கரூர் வி.எஸ்.பி கல்லூரியில் நீட் தேர்வு எழுத வந்த ஒரு மாணவனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த மாணவர் தேர்வு மையத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர் தனிமைப்படுத்தப்பட்டு தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும் என தெரிகிறது.