சபாநாயகரின் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வரவில்லை - கருணாஸ் பேட்டி

சபாநாயகரின் விளக்கம் கேட்கும் நோட்டீஸ் வரவில்லை - கருணாஸ் பேட்டி

சபாநாயகரிடம் இருந்து எனக்கு எந்த விளக்கம் கேட்கும் நோட்டீசும் வரவில்லை என்று கருணாஸ் எம்.எல்.ஏ. கூறினார். #Karunas #TTVDhinakaran
Published on

மதுரை:

அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு கூறியது.

இதையடுத்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் மதுரையில் 2 தினங்களாக தினகரன் ஆலோசனை நடத்தினார்.

இந்த நிலையில் மதுரையில் தனியார் ஓட்டலில் தங்கி இருந்த தினகரனை முக்குலத்தோர் புலிப்படை அமைப்பின் தலைவர் கருணாஸ் எம்.எல்.ஏ. நேற்றிரவு சந்தித்து பேசினார்.

அப்போது தினகரனுக்கான ஆதரவு நிலைப்பாடு, இதற்காக அ.தி.மு.க. நடவடிக்கை எடுத்தால் அதை எதிர்கொள்வது தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த சந்திப்பு சுமார் 25 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்தது.

பின்னர் கருணாஸ் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தேவர் சமூகத்தை சேர்ந்தவர் என்பதால்தான் ஜெயலலிதா எனக்கு வாய்ப்பு கொடுத்தார். அவரது அங்கீகாரம் போதும்.

கள்ளர், மறவர், அகமுடையார் சமூகத்தை ஒன்றாக இணைக்கவே முக்குலத்தோர் புலிப்படை அமைப்பை தொடங்கினேன். இதற்கான வாய்ப்பாக சட்டசபையில் நுழைந்தேன். அது நிறைவேறுமா? என்ற சந்தேகம் எழுகிறது.

ஜெயலலிதா இறப்புக்கு பிறகு அ.தி.மு.க. அணி, அணியாகத்தான் உள்ளது. அந்த கட்சியில் என்ன நடக்கிறது என்றே தெரிய வில்லை.

சபாநாயகர் ஒருதலைப் பட்சமாக செயல்பட்டு வருகிறார். அவரிடம் இருந்து இதுவரை எனக்கு எந்த விளக்க நோட்டீசும் வரவில்லை. அப்படி நோட்டீசு வந்தால் அதை நான் சந்திக்க தயார்.

எனக்கு எதிராக செயல்படுவதற்காக பல்வேறு அமைப்பினருக்கும் அ.தி.மு.க.வில் உள்ள பல அமைச்சர்கள் பணம் கொடுத்து தூண்டி விடுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார். #Karunas #TTVDhinakaran

X

Maalai Malar
www.maalaimalar.com