

சென்னை:
காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை 6.10 மணியளவில் காலமானார். இதனை அடுத்து, ஜனாதிபதி, பிரதமர் உள்பட பல தலைவர்கள் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கருணாநிதியின் உடல் காவேரி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. வீர வணக்க முழக்கங்களுடன் தொண்டர்கள் வாகனத்தை சூழ்ந்து வந்தனர்.
இரவு 1 மணி வரை இங்கு குடும்பத்தினர் அஞ்சலி செலுத்துவார்கள். அதன் பின்னர் சிஐடி காலனி கொண்டு செல்லப்படும் அவரது உடலுக்கு அதிகாலை 3 மணி வரையிலும் குடும்பத்தினர் இறுதி மரியாதை செலுத்துவார்கள் என திமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதன் பின்னர், நாளை அதிகாலை 4 மணிக்கு அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹாலுக்கு கொண்டு வரப்பட உள்ள அவரது உடலுக்கு முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.