

பொன்னேரி:
காணும் பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி பழவேற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் காலை முதலே குவிந்தனர்.
அவர்கள் கடற்கரையில் குளித்தும், மர நிழல்களில் அமர்ந்தும் உற்சாகமாக பொழுதை கழித்தனர். வீட்டில் இருந்து சமைத்து கொண்டு வந்திருந்த உணவை உண்டு மகிழ்ந்தனர்.
அங்குள்ள டச்சுக் கல்லறை, நிழல் கடிகாரம் ஆகியவற்றை கண்டுகளித்தனர். இந்த ஆண்டும் ஏரியில் படகு சவாரிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்ததால் பறவைகள் சரணாலயத்தை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பழவேற்காடு பகுதிக்கு உள்ளே நுழையும் முன்பு இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
திருட்டு சம்பவங்களை தடுக்க சாதாரண உடையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
குடிபோதையில் வாகனம் ஓட்டினால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் எனவும் வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் எச்சரித்தனர்.