

சென்னை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ள சோமஸ்கந்தர் சிலை சேதம் அடைந்ததையொட்டி புதிய சிலை செய்வதற்கு பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டது.
இப்படி பெறப்பட்ட 8.7 கிலோ தங்கத்தில் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் இந்த சிலை மோசடியில் அறநிலையத்துறை முன்னாள் கமிஷனரான வீரசண்முக மணிக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இருப்பினும் அவரை உடனடியாக கைது செய்யாத போலீசார் அதற்கான ஆவணங்களை திரட்டி வந்தனர்.
இதனையடுத்து நேற்று சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வீரசண்முக மணியை கைது செய்தனர். அவரிடம் சோமஸ்கந்தர் சிலை மோசடி தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிகாரி வீரசண்முக மணி அறநிலையத்துறையில் பணியாற்றியபோது அனைவருக்கும் நன்கு அறிமுகமானவராக இருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு துறைகளிலும் அவர் பணி புரிந்துள்ளார். சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அறநிலையத்துறையில் பணியாற்றிய 2 பெண் அதிகாரிகளை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் அதிகாரியான வீரசண்முகமணி கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #EkambaranatharTemple