

சென்னை:
மதுரை ரிசர்வ் லைன் பகுதியில் வசிப்பவர் சார்பு ஆய்வாளர் முருகசுந்தரத்தின் 19 வயது மகள் ஜோதிஸ்ரீ துர்கா. இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து, இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு தயாராகி கொண்டிருந்தார்.
நாளை நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு படித்துக்கொண்டிருந்த மாணவி ஜோதி துர்கா இன்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த ஆண்டும் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிடுவோமோ? என்ற அச்சத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
இந்நிலையில், மாணவி ஜோதிஸ்ரீ-யின் மரணம் தொடர்பாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்:-
’மாணவி ஜோதிஸ்ரீ துர்காவின் மரணமே நீட் தேர்வின் இறுதி மரணமாக இருக்க நாம் செய்யப் போவது என்ன? மத்திய மாநில அரசுகள் மாற்று வழியினைச் சிந்தித்துத் துரிதமாக செயல்படுத்திட வேண்டும்.
நம் பிள்ளைகளுக்கு நம்பிக்கையையும், மன வலிமையையும் தர வேண்டியது நம் கடமை. செய்வோம் அதை!’ என பதிவிட்டுள்ளார்.