

பரங்கிப்பேட்டை:
கடந்த 2014-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலின் போது புவனகிரியில் பா.ம.க. சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டி குரு கலந்து கொண்டு பேசினார். அப்போது, அவர் தமிழக அரசை விமர்சித்து அவதூறாக பேசியதாக புவனகிரி போலீசார் குரு மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பரங்கிப்பேட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த வழக்கின் விசாரணையின் போது காடுவெட்டி குரு கோர்ட்டில் ஆஜராகவில்லை. எனவே அவருக்கு பிடிவாரண்டு பிறப்பித்து நீதிபதி வாசுதேவன் உத்தரவிட்டார்.
இந்த நிலையில், காடுவெட்டி குரு பரங்கிப்பேட்டை கோர்ட்டில் நீதிபதி வாசுதேவன் முன்பு நேற்று ஆஜரானார். கடந்த காலங்களில் விசாரணைக்கு ஆஜராக முடியாததற்கான காரணத்தை விளக்கினார். இதையடுத்து குருவின் மீதான பிடிவாரண்டை நீதிபதி ரத்து செய்தார். இந்த வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (ஆகஸ்டு) 19-ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.