

தி.மு.க. தலைவர் கருணாநிதியின் சட்டமன்ற வைரவிழா மற்றும் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் இன்று நடைபெற்றது. விழாவில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் காதர் மொய்தீன் பேசும்போது, கருணாநிதியை வெகுவாகப் பாராட்டினார்.
தமிழகத்தின் பாரம்பரியம், பண்பாட்டை நிலைநிறுத்திய திமுக தலைவர் கருணாநிதிக்கு, மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் காதர் மொய்தீன். தமிழகத்தில் அடுத்து ஆட்சி அமைக்கப் போவது தி.மு.க. தான் என்றும் அவர் கூறினார்.
இதேபோல் முன்னதாக பேசிய பீகார் முதல்வர் நிதிஷ் குமார், தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வருவார் என்று தெரிவித்தார்.
மு.க.ஸ்டாலின் எல்லாவித அரசியல் அனுபவங்களையும் பெற்றிருப்பதாக கூறிய அவர், கருணாநிதி கொண்டு வந்த சீரிய திட்டங்களை நிறைவேற்றி மக்களுக்கு நல்ல வாழ்வை அளிப்பார் என்றும் பூரண மதுவிலக்கை அமல்படுத்துவார் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.