

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியாக ரஞ்சன் கோகாய் இருக்கிறார். அவரது பதவிக்காலம் நவம்பர் 17-ந்தேதியுடன் முடிவடைகிறது.
அயோத்தி வழக்கு விசாரணை முடிந்துவிட்டது. இந்த தீர்ப்பை வழங்கிவிட்டு அவர் ஓய்வு பெறுகிறார்.
சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதிக்கு எஸ்.ஏ.பாப்டே பெயரை ஓய்வு பெற இருக்கும் ரஞ்சன் கோகாய் ஏற்கனவே பரிந்துரை செய்து இருந்தார். அதன்படி அவர் சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமனமாகி உள்ளார்.
சுப்ரீம் கோர்ட்டின் புதிய தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டே நவம்பர் 18-ந்தேதி பதவியேற்கிறார். அவர் சுப்ரீம் கோர்ட்டின் 47-வது தலைமை நீதிபதி ஆவார். அவர் 2021-ம் ஆண்டு ஏப்ரல் 23-ந்தேதி வரை அந்த பதவியில் இருப்பார்.
எஸ்.ஏ. பாப்டே 1956-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் பிறந்தார். நாக்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தார். 2000-ம் ஆண்டில் மும்பை ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக இணைந்தார்.
2012-ம் ஆண்டு அவர் மத்திய பிரதேச ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். 2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அயோத்தி வழக்கு, கிரிக்கெட் வாரிய வழக்கு உள்ளிட்ட வழக்குகளை விசாரித்துள்ளார். 6 ஆண்டுகளில் எஸ்.ஏ. பாப்டே சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்க உள்ளார். 2021-ல் அவர் ஓய்வு பெற உள்ளார்.