

புதுச்சேரி:
புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 150 எம்.பி.பி.எஸ். இடங்களும், காரைக்கால் கிளை கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன.
இந்த 200 இடங்களுக்கும் அகில இந்திய அளவில் தனியாக நுழைவு தேர்வு நடத்தி மாணவர்களை தேர்வு செய்கிறார்கள்.
இதற்கான நுழைவு தேர்வு இன்று நாடு முழுவதும் டெல்லி, சென்னை, திருவனந்தபுரம், ஐதராபாத், புதுவை உள்ளிட்ட 75 நகரங்களில் 339 மையங்களில் நடைபெற்று வருகிறது.
புதுவையில் மட்டும் ஜிப்மர் மருத்துவ கல்லூரி வளாகம் உள்பட 6 மையங்களில் தேர்வு நடத்தப்படுகிறது.
தேர்வு எழுதுவதற்கு 1 லட்சத்து 89 ஆயிரத்து 663 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அவர்களுக்கு காலை, மாலை என இரு பிரிவாக தேர்வு நடந்தது.
காலை 10 மணியில் இருந்து 12.30 மணி வரை ஒரு பிரிவினருக்கும், மாலை 3 மணியில் இருந்து 5.30 மணி வரை மற்றொரு பிரிவினருக்கும் தேர்வு நடத்தப்படுகிறது. காலை பிரிவில் 83 ஆயிரத்து 720 பேரும், மாலை பிரிவில் 1 லட்சத்து 5 ஆயிரத்து 943 பேரும் தேர்வு எழுதினார்கள்.
தேர்வையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. பயோமெட்ரிக் முறையில் பரிசோதனை செய்த பிறகே மாணவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனர். ஆதார் அட்டை உள்ளிட்ட அடையாள அட்டைகளும் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
அனைத்து மையங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.