

சென்னை:
ஆர்.கே நகர் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ என்று டி.டி.வி தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல், ஒரு வீடியோவை இன்று காலை வெளியிட, அரசியல் அரங்கில் மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
தேர்தல் நேரத்தில் இந்த வீடியோ வெளியிட்டது உள்நோக்கம் கொண்டதாகவே கருத்தப்பட்டாலும், ஜெயலலிதா சிகிச்சை குறித்து அவதூறு வந்துகொண்டே இருந்ததால் தற்போது வீடியோவை வெளியிட்டதாக வெற்றிவேல் கூறியுள்ளார். ஆனால், வெற்றிவேல் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டதாக சசிகலாவின் அண்ணன் மகள் கிருஷ்ணபிரியா குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திவாகரன் மகன் ஜெயானந்த், ஜெயலலிதா மரணம் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டதால் வெற்றிவேல் இந்த வீடியோவை வெளியிட்டு உள்ளார். வீடியோவை வெளியிட்டத்தை சசிகலா ஏற்று கொள்வார்.
வீடியோ வெளியிட்டத்தை எங்களது குடும்பத்தைச் சேர்ந்த சிலர் தவறு என்று கூறி உள்ளார்கள். ஒரு சிலர் தவறு என கூறுவது முக்கியமா? தொண்டர்களின் நிம்மதி முக்கியமா?
வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சர்வதேச அளவில் ஆய்வு நடத்தலாம். வீடியோ வெளியிட்டது குறித்து சசிகலா, தினகரனுக்கு தெரியாது.
இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.