

சென்னை பள்ளிக்கரணையில் செப்டம்பர் மாதம் 12-ம் தேதி அ.தி.மு.க.வினர் வைத்த பேனர் விழுந்து சுபஸ்ரீ என்ற இளம்பெண் பலியானார். மோட்டார் சைக்கிளில் சுபஸ்ரீ சென்ற போது சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் அவர் மீது விழுந்தது. இதில் நிலைதடுமாறிய சுபஸ்ரீ மீது பின்னால் வந்த தண்ணீர் லாரி மோதியது. இந்த விபத்தில் உடல் நசுங்கி அவர் உயிரிழந்தார். அனுமதியின்றி பேனர் வைத்ததாக அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஜாமீன் கோரி ஜெயகோபால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இன்று மனுவை விசாரித்த நீதிபதிகள், ஜெயகோபாலுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கினர்.
ஏழை நோயாளியின் சிகிச்சைக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், சென்னை அடையாறில் உள்ள கேன்சர் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனைக்கு தலா ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
மேலும் மதுரையில் தங்கியிருந்து தினமும் காவல்நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையும் ஜெயகோபாலுக்கு விதிக்கப்பட்டது.