

ஜம்மு:
ஜம்மு - காஷ்மீரில் உள்ள எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு இந்திய படை தரப்பில் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும் பாகிஸ்தான் படையினரும், தீவிரவாதிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ரஜோரி மாவட்டத்தின் எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இன்றிரவு சுமார் 7:30 மணியளவில் சில தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலில் ஒரு வாலிபரின் காலில் குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர் நவ்சேரா செக்டாரின் புக்கெர்னி கிராமத்தை சேர்ந்த மொகமது யூசப் என போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் 31-ம் தேதி புல்வாமா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் ஐந்து பாதுகாப்புப்படை வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #JammuKashmir #PakistanCeasefire #Manhitbybullet #tamilnews