

புதுடெல்லி:
71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
தலைநகர் டெல்லி ராஜபாதையில் இன்று காலை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், தேசியக்கொடியை ஏற்றினார். அதன்பின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், டெல்லி ராஜபாதையில் குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்கள் சார்பில் 16 அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெற்றது.
தமிழகத்தின் சார்பில் அய்யனார் கோவில் திருவிழாவை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. இதில் தமிழர்களின் காவல் தெய்வமாக கருதப்படும் அய்யனார் சிலை காட்சிப்படுத்தப்பட்டது.
சுமார் 17 அடி உயரம் கொண்ட பிரமாண்ட சிலை, அவருக்கு முன்னால் குதிரையும், காவலாளிகளும் இருப்பது போல் அய்யனார் சிலை வடிவமைக்கப்பட்டு இருந்தது. தமிழகத்தின் பாரம்பரிய இசை, நடனம் என வண்ணமயமாக வந்த தமிழகத்தின் அலங்கார ஊர்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.