சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு

சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #CBIDirector #RishiKumarShukla
சிபிஐ புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லா நியமனம் - மத்திய அரசு அறிவிப்பு
Published on

புதுடெல்லி: 

சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மாவுக்கும் சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானாவுக்கும் இடையே பனிப்போர் ஏற்பட்டு ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகள் கூறினர். இதையடுத்து இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் செல்ல உத்தரவிட்டது. இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டார்.

இதை எதிர்த்து அலோக் வர்மா சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதில், மீண்டும் அவரை பணியில் தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. இதைத்தொடர்ந்து, அலோக் வர்மா டெல்லி சி.பி.ஐ. தலைமை அலுவலகத்துக்கு வந்து மீண்டும் சி.பி.ஐ. இயக்குனராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சி.பி.ஐ. இயக்குநர் அலோக் வர்மா மீதான ஊழல் புகாரில் எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி டெல்லியில் பிரதமர் இல்லத்தில் நியமனக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் முடிவில், சிபிஐ இயக்குனர் பதவியில் இருந்து அலோக் வர்மா நீக்கப்பட்டு, தீயணைப்புத்துறை இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.

புதிய பதவியை ஏற்க மறுத்த அலோக் வர்மா தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால், இடைக்கால சி.பி.ஐ. இயக்குனராக நாகேஷ்வர ராவ் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

இதற்கிடையே, சி.பி.ஐ. துறைக்கு நிரந்தரமாக இரு இயக்குனரை மத்திய அரசு இன்னும் நியமிக்காதது ஏன்? என சுப்ரீம் கோர்ட் நேற்று கேள்வி எழுப்பியது.

புதிய சிபிஐ இயக்குனரை நியமனம் செய்வது தொடர்பாக டெல்லியில் பிரதமர் மோடியின் இல்லத்தில் நேற்று இரவு நடந்த தேர்வுக்குழு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர். 

இந்நிலையில், சிபிஐயின் புதிய இயக்குனராக ரிஷி குமார் சுக்லாவை நியமனம் செய்து மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. #CBIDirector #RishiKumarShukla

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com