

சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் இடையிலான ஐபிஎல் தொடரின் 14-வது ஆட்டம் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வார்னர் பேட்டிங் தேர்வு செய்தார்.
முதல் ஓவரிலேயே பேர்ஸ்டோவ் டக்அவுட் ஆக, ஐதராபாத்தின் ரன்வேகத்தில் தடைஏற்பட்டது. இதனால் பவர் பிளேயில் 42 ரன்களே அடித்தது. அடுத்து வந்த மணிஷ் பாண்டே அதிரடியா விளையாட நினைத்து 8-வது ஓவரில் முதல் பந்தில் 29 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அவர் 21 பந்தில் ஐந்து பவுண்டரிகள் அடித்தார்.
முதல் 10 ஓவரில் ஐதராபாத் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 63 ரன்கள் எடுத்தது. 11-வது ஓவரை சாவ்லா வீசினார். இந்த ஓவரில் ஐதராபாத் அணிக்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 5-வது பந்தில் வார்னர் 28 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் கேன் வில்லியம்சன் ரன்அவுட் ஆனார்.
11 ஓவரில் 69 ரன்கள் எடுப்பதற்குள் முதல் நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் ஐதராபாத் அணி 125 ரன்னை தாண்டுமா? என்ற சந்தேகம் எழுந்தது.
5-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம் வீரர்களாக அபிஷேக் சர்மா- பிரியம் கார்க் இன்னிங்சை கெஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினர். 14-வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கினர்.
ஜடேஜா வீசிய 14-வது ஓவரில் தலா ஒரு சிக்ஸ், பவுண்டரியுடன் 14 ரன்கள் அடித்தது. அடுத்த ஓவரில் 9 ரன்கள் அடிக்க 15 ஓவரில் 100 ரன்கள் அடித்தது.
17-வது ஓவரை சாம் கர்ரன் வீசினார். இந்த ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்ஸ் விளாச 22 ரன்கள் கிடைத்தது, இதனால் ஸ்போர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
18-வது ஓவரில் 13 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா 31 ரன்னில் ஆட்டமிழந்தார். இவர் பிரியம் கார்க் உடன் இணைந்து 77 ரன்கள் அடித்தது ஐதராபாத்துக்கு மிகப்பெரிய பூஸ்ட் ஆக அமைந்தது.
19-வது ஓவரில் 11 ரன்கள் கிடைத்தது. இந்த ஓவரின் கடைசி பந்தில் ஒரு ரன் அடித்து இளம் வீரர் பிரியம் கார்க் முதல் அரைசதத்தை பூர்த்தி செய்தார். கடைசி ஓவரில் 7 ரன்கள் அடிக்க ஐதராபாத் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் அடித்துள்ளது. பிரியம் கார்க் 26 பந்தில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
சென்னை அணி சார்பில் தீபக் சாஹர் 31 ரன் விட்டுக்கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். சர்துல் தாகூர், சாவ்லா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.