

தாஷ்கண்ட்:
உலகின் பலம் பொருந்திய அமைப்புகளில் ஒன்றான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷியா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய 8 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த நாடுகளிடையே பாதுகாப்பு, பொருளாதாரம், பயங்கரவாத செயல்களுக்கு எதிரான நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை ஏற்படுத்தும் வகையில் மாநாடு நடத்தப்பட்டு, விரிவாக ஆலோசனை நடத்தப்படுகிறது.
அவ்வகையில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தும் என உஸ்பெகிஸ்தான் பிரதமர் அப்துல்லா அரிபோவ் இன்று கூறி உள்ளார்.
“ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவதற்கு நாங்கள் ஒப்புதல் அளிக்கிறோம். முதல் முறையாக நமது அமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளின் தலைவர்களின் கவுன்சிலுக்கு இந்தியா தலைமை தாங்க உள்ளது. தாஷ்கண்டில் நடந்த மாநாட்டின்போது, இந்த பொறுப்பான பணியை ஏற்றுக்கொண்டதற்காக இந்தியாவுக்கு எனது வாழ்த்துக்கள்” என்று பிரதமர் குறிப்பிட்டிருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது.
இந்தியாவும் பாகிஸ்தானும் இந்த அமைப்பில் கடந்த 2017ம் ஆண்டுதான் உறுப்பினராக இணைந்தது குறிப்பிடத்தக்கது.