

புதுடெல்லி:
நேபாள பிரதமர் ஷேர் பகதூர் தியூபா 5 நாள் அரசு முறை பயணமாக நேற்று இந்தியா வந்துள்ளார். அவருடன், 4 அமைச்சர்களும், 12 சட்ட உறுப்பினர்கள் கொண்ட குழுவும் வந்துள்ளது. நேபாள பிரதமருக்கு ஜனாதிபதி மாளிகையில் நேற்று, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தியூபா ஏற்கனவே 1996, 2004 மற்றும் 2005-ம் ஆண்டுகளிலும் நேபாள பிரதமராக இந்தியாவிற்கு வந்துள்ளார்.
இந்த பயணத்தின் இரண்டாம் நாளான இன்று, தியூபா, இந்திய பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு முன்பு இருநாடுகளிடையேயான மின்வழிப் பாதைகளை இருநாட்டு பிரதமர்களும் கூட்டாக தொடங்கி வைத்தனர். இந்த சந்திப்பின் போது, இரு நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்துவதற்கான திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
சந்திப்பிற்கு பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய மோடி, இரு நாடுகளிடையே எட்டு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது:-
"அர்ஜூன் lll நீர்மின்சக்தி திட்டத்திற்கான இடப்பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டதாக தியூபா கூறினார். அதன் தொடக்க விழாவிற்கு எனக்கு அழைப்பு விடுத்த அவருக்கு நன்றி. நேபாள நாட்டின் வளர்ச்சி திட்டங்களில் இந்தியா பங்குவகிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. நம் இரு நாடுகளும் ஆற்றல், நீர் ஆதாரங்கள் மற்றும் இணைப்பு திட்டங்களில் ஒன்றாக செயல்பட்டு வருகிறது”, என கூறினார்.
சுமார் 5723 கோடி ரூபாய் மதிப்பிலான அர்ஜூன் lll நீர்மின்சக்தி திட்டத்திற்கான ஒப்புதலை இந்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அளித்தது. 900 மெகாவாட் திறன் கொண்ட இந்த திட்டம் நேபாளத்தின ஷன்குவாசபா மாவட்டத்தில் அமைய உள்ளது.
பின்னர் செய்தியாளர்களிடையே பேசிய நேபாள பிரதமர், அந்நாட்டில் தொழில் தொடங்க இந்திய தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
இந்த சந்திப்பைத் தொடர்ந்து டெல்லியில் அரசுப் பணிகளை முடித்துக்கொண்டு ஐதராபாத், திருப்பதி மற்றும் புத்த கயா ஆகிய இடங்களுக்கு தியூபா சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.