

இந்தியாவில் மாதம் 150 கோடி ஜிபி மொபைல் டேட்டா பயன்படுத்தப்படுவதை தொடர்ந்து சர்வதேச அளவில் அதிக மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. நிதி ஆயோக் அமைப்பின் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காண்ட் இத்தகவலை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
"மாதம் 150 கோடி ஜிபி டேட்டா பயன்படுத்தப்படும் நிலையில், இந்தியா அதிகளவு மொபைல் டேட்டா பயன்படுத்தும் நாடுகளில் முதலிடம் பிடித்துள்ளது. மேலும் அமெரிக்கா மற்றும் சீனாவை ஒன்றிணைத்தாலும், இந்திய மொபைல் டேட்டா பயன்பாடு அதிகமாக இருக்கிறது." என தெரிவித்துள்ளார். மொபைல் டேட்டா பயன்பாடு சார்ந்த தகவல் எப்படி கிடைத்தது என்பது குறித்த தகவலை அவர் வெளியிடவில்லை.
முன்னதாக ஊக்லா வெளியிட்ட தகவல்களின் படி அதிவேக பிராட்பேண்ட் வேகம் வழங்கும் நாடுகளில் சர்வதேச சந்தையில் இந்தியா நேபால் மற்றும் இலங்கையை தொடர்ந்து 109-வது இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2017-ம் ஆண்டின் துவக்கத்தில் மொபைல் டேட்டா டவுன்லோடு வேகம் சராசரியாக நொடிக்கு 7.65 எம்.பி.யாக இருந்தது.
எனினும் ஆண்டு இறுதியான நவம்பர் மாத நிலவரப்படி டவுன்லோடு வேகம் நொடிக்கு 8.80 எம்.பி.யாக அதிகரித்துள்ளது. இது 15% உயர்வு என ஊக்லா வெளியிட்டுள்ள தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொபைல் டேட்டா வேகங்கள் அதிகரித்த நிலையில், பிராட்பேண்ட் வேகமும் அதிகரித்துள்ளது.