

நெல்லை:
நெல்லையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் பா.ஜ.க. தேசிய செயலாளர் முரளிதரராவ் கலந்து கொண்டு பேசியதாவது:-
இந்தியாவில் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. பா.ஜ.க. தமிழர்களுக்கு எதிரான கட்சி என்று தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் மக்களை ஏமாற்றி வருகிறது. தி.மு.க.வில் வாரிசு அரசியல் நடக்கிறது. மகன் மு.க.ஸ்டாலின், மகள் கனிமொழி, மருமகன், பேரன், பேத்திகள் என்று ஆட்சி நடத்தி வருகிறார்கள்.
அண்ணா இப்போது வந்தால் தி.மு.க.வில் நுழைய முடியாது. பி.ஜே.பி.யின் திட்டங்களை பார்த்து பி.ஜே.பி.யில் தான் சேருவார். தி.மு.க.வும், காங்கிரசும் பல்வேறு ஊழல்களில் சிக்கி உள்ளது. மு.க.ஸ்டாலின், ராகுல்காந்தி ஆகியோரால் ஆட்சிக்கு வரமுடியாது. அவர்கள் தமிழ்நாட்டின் நலனுக்கு எதுவும் செய்யவில்லை. பிரதமர் நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தபிறகு தமிழக மீனவர் நலனுக்கு பல்வேறு திட்டங்கள் தீட்டி உள்ளார்.
70 ஆண்டு காலம் சாதாரண மக்கள் வங்கிக்கு செல்ல முடியவில்லை. இப்போது 30 கோடி மக்கள் வங்கி கணக்கு வைத்துள்ளனர். இது கின்னஸ் சாதனை. இந்தியாவில் 3 கோடி பேருக்கு இலவச கியாஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
திருக்குறளின்படி தமிழகத்தில் எந்த கட்சியும் ஆட்சி நடத்தவில்லை. திருக்குறளில் லஞ்ச லாவண்யம் இல்லாத ஆட்சி சிறந்த ஆட்சி என்று கூறப்பட்டுள்ளது. திருக்குறள் காட்டிய வழியில் பா.ஜ.க. ஆட்சி நடக்கிறது. தமிழகத்தில் பாரதிய ஜனதா வளர வில்லை என்றார்கள். ஆனால் இங்கு கூடியிருக்கும் கூட்டம் பி.ஜே.பி.யின் வளர்ச்சியை நிரூபித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.