

புதுடெல்லி:
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அனைத்து மசூதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகைகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஏராளமான இஸ்லாமியர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பக்ரீத் பண்டிகையையொட்டி இஸ்லாமியர்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் தங்களது வாழ்த்துக்களை டுவிட்டரில் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறுகையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதேபோல், பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிடுகையில், பக்ரீத் திருநாளில் நல்லிணக்கம், சகோதரத்துவம், ஒற்றுமை தழைத்தோங்கட்டும் என கூறியுள்ளார்.
டெல்லியில் உள்ள மசூதி ஒன்றில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் மத்திய அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி கலந்து கொண்டார்.