

உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டத்தில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால் இறுதிக்கு தகுதி பெறும். நேற்றுடன் லீக் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ‘பி’ பிரிவில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி, ஐரோப்பிய சாம்பியன் நெதர்லாந்தை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நெதர்லாந்து அணி அடுத்தடுத்து கோல்கள் அடித்தது. அந்த அணியின் தியரி பிங்மான் 2-வது நிமிடத்திலும், சான்டெர் பார்ட் 12-வது நிமிடத்திலும், மிர்கோ புய்ஜெர் 24-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர். இந்திய அணி வீரர் ஆகாஷ்தீப்சிங் 28-வது நிமிடத்தில் பதில் கோல் திருப்பினார்.
அதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில் நெதர்லாந்து அணி 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியாவை வீழ்த்தி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்தது. 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட இந்திய அணி தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்தது. நாளை நடைபெறும் கால் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, மலேசியாவை சந்திக்கிறது.