

சென்னை:
தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும் என தமிழக அரசு கடந்த 2010-ம் ஆண்டு அரசாணை வெளியிட்டு இருந்தது.
ஆனால், அந்த அரசாணையை தமிழக அரசு முறையாக பின்பற்றவில்லை என திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் சமீபத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், முதுநிலை வரை தமிழில் படித்த தனக்கு தமிழக அரசு உரிய வேலைவாய்ப்பு வழங்கவில்லை. தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை முறையாக பின்பற்றுவதில்லை என குற்றம் சாட்டியிருந்தார்.
இந்த மனு உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், 2010-ல் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அதன்படி, தமிழில் படித்தோருக்கு அரசு வேலை வாய்ப்பில் கட்டாயம் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.