

லண்டன்:
இங்கிலாந்தின் தெற்கு பகுதியில் டான்காஸ்டர் நகரைச் சேர்ந்தவர் ஆல்பர்ட் சேம்பர்ஸ்(வயது 99). முன்னாள் ராணுவ வீரரான இவர் 2-ம் உலக போரில் பங்கேற்று வீரத்தை வெளிப்படுத்தியவர் ஆவார். போரில் காயம் அடைந்த இவர், எதிரி நாட்டின் போர் முகாமில் 3 ஆண்டுகள் கைதிகளாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆல்பர்ட் சேம்பர்சை கொரோனா வைரஸ் தாக்கியது. உடனடியாக அவர் டான்காஸ்டர் நகரில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அளித்த தீவிர சிகிச்சையின் மூலம் ஆல்பர்ட் சேம்பர்ஸ் கொரோனாவில் இருந்து மீண்டார். அதனை தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். தனது உடல்நலம் தேற உதவிய மருத்துவர்கள் மற்றும் நர்சுகளுக்கு ஆல்பர்ட் சேம்பர்ஸ் நன்றி தெரிவித்தார்.
வருகிற ஜூன் மாதம் தனது 100-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ள ஆல்பர்ட் சேம்பர்ஸ், கொரோனா தொற்றில் இருந்து போராடி மீண்டதை சிறப்பிக்கும் வகையில் மருத்துவ ஊழியர்கள் கைகளை தட்டி வாழ்த்து தெரிவித்து அவரை வழியனுப்பி வைத்தனர்.