

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்த ஹர்பஜன் சிங், டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7-ந்தேதி முதல் மே 27-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடக்கிறது. இதையொட்டி 8 அணிகளின் சார்பில் 18 வீரர்கள் மட்டுமே தக்க வைக்கப்பட்டனர். எஞ்சிய வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.
ஐ.பி.எல். மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடைபெற்றது. 360 இந்தியர்கள் உள்பட மொத்தம் 578 வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சமாக 25 வீரர்களும் இருக்க வேண்டும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ரெய்னா, ஜடேஜா ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர். ஆர்.டி.எம். முறையை பயன்படுத்தி டு பிளிசிஸ், வெய்ன் பிராவோவை தக்க வைத்தனர். இதுதவிர முன்னணி சுழல் பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங், ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன், இந்திய ஆல்-ரவுண்டர் கெதார் ஜாதவ், அம்பதி ராயுடு, இம்ரான் தாஹிர் ஆகியோரும் சென்னை அணியில் இடம்பிடித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்த ஹர்பஜன் சிங் டுவிட்டரில் தமிழில் பதிவிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.