குட்கா விற்க ரூ.40 கோடி லஞ்சம் - மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் சிக்குகிறார்கள்

குட்கா ஊழல் வழக்கில் மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. #Gutkha #GutkhaScam #CBIinquiry
குட்கா விற்க ரூ.40 கோடி லஞ்சம் - மேலும் 2 போலீஸ் அதிகாரிகள் சிக்குகிறார்கள்
Published on

சென்னை:

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்காவை விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் புதிய தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.

செங்குன்றம் அருகே குட்கா குடோன் வைத்துள்ள மாதவராவ் வீட்டில் கடந்த 2016-ம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய போது சிக்கிய டைரி மூலம் லஞ்சம் பெற்றவர்கள் முழு விபரமும் தெரிய வந்தது.

லஞ்சம் பெற்றவர்களில் அமைச்சர் ஒருவரது பெயரும் டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமி‌ஷனரின் பெயர்களும் முக்கிய இடம் பிடித்திருந்தன. இவர்கள் தவிர போலீஸ் உயர் அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகள், உணவு துறை அதிகாரிகளும் அதிக அளவில் லஞ்சம் வாங்கி இருப்பது அந்த டைரி மூலம் உறுதியானது.

வருமான வரித்துறை இதுபற்றி தமிழக அரசுக்கு தகவல் தெரிவித்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கைகள் எதையும் மேற்கொள்ள வில்லை.

இதையடுத்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் குட்கா ஊழல் விவகாரம் சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. அதன் பேரில் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை வந்து குட்கா அதிபர் மாதவராவ் உள்பட பலரை அழைத்து விசாரணை நடத்தினார்கள்.

அப்போது குட்கா விற்பதற்கு பல கோடி ரூபாய் லஞ்சமாக கைமாறி இருப்பது தெரிந்தது. லஞ்சம் வாங்கிக் கொடுத்த இடைத்தரகர்களிடமும் அதிரடி விசாரணை நடத்தப்பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சமீபத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 35 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

டி.ஜி.பி. அலுவலகம், முன்னாள் போலீஸ் கமி‌ஷனர் ஜார்ஜ் வீடு ஆகியவற்றில் நடந்த சோதனை மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சோதனையின் போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களும் கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சமாக கொடுக்கப்பட்டு இருப்பதை உறுதி செய்தது. இதைத் தொடர்ந்து குட்கா தயாரிப்பாளர்கள் மாதவ ராவ், சீனிவாசராவ் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அந்த 6 பேரில் 3 பேர் அரசு அதிகாரிகள் ஆவார்கள்.

இதற்கிடையே லஞ்சம் கொடுத்த தரகர்கள் 2 பேர் சி.பி.ஐ.யிடம் அப்ரூவர்களாக மாறியுள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் கொடுத்த தகவல்களின் பேரில் சி.பி.ஐ. யின் அடுத்த பார்வை போலீஸ் உயர் அதிகாரிகள் மீது திரும்பி இருப்பது தெரிய வந்தது. எனவே குட்கா ஊழல் வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் சிக்குவார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் குட்கா ஊழலில் மேலும் 2 முக்கிய ஐ.பி.எஸ். அந்தஸ்துள்ள உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளது. அந்த இரு போலீஸ் அதிகாரிகளையும் டெல்லி சி.பி.ஐ. அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். விரைவில் அவர்கள் இருவரும் சி.பி.ஐ.யின் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

சுகாதாரத் துறை மூத்த அதிகாரிகள் சிலரும் சி.பி.ஐ. கண்காணிப்பில் உள்ளனர். விரைவில் அவர்களில் சிலர் கைதாக வாய்ப்புள்ளது. எனவே சி.பி.ஐ.யின் அடுத்த அதிரடி எந்த நேரத்திலும் இருக்கும் என்று சொல்கிறார்கள்.

தற்போது 4 போலீஸ் அதிகாரிகளை சி.பி.ஐ. அதிகாரிகள் நெருங்கி உள்ளனர். அந்த போலீஸ் அதிகாரிகள் எப்போது கைது செய்யப்படுவார்கள் என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. அந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டால்தான் தப்பு செய்த உயர் போலீஸ் அதிகாரிகளையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது.

எனவே குட்கா ஊழலில் போலீஸ் அதிகாரிகள் கைது எப்போது இருக்கும் என்பதுதான் பிரதானமான கேள்வியாக உள்ளது. அந்த போலீஸ் அதிகாரிகள் கைதாகும் போது அரசு ஊழியர்கள் சிலரும் கைதாக வாய்ப்புள்ளது.

உணவு பாதுகாப்புத் துறை, சுகாதாரத்துறை அதிகாரிகளில் பெரும்பாலானவர்கள் லஞ்சம் வாங்கியதை ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகையால் அவர்கள் மீது நடவடிக்கை பாய்வது உறுதியாகி விட்டது. அவர்களும் அப்ரூவர்களாக மாறினால் போலீஸ் உயர் அதிகாரிகள் மீதான பிடி இறுகும்.

ஏற்கனவே குட்கா தயாரிப்பாளர்கள் 2 பேரும் சி.பி.ஐ.யிடம் லஞ்சம் வாங்கிய போலீஸ் உயர் அதிகாரிகள் பற்றிய முழு தகவல்களையும் தெரிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. #Gutkha #GutkhaScam #CBIinquiry

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com