

மத்திய அரசு சமீபத்தில் பிறப்பித்த இறைச்சிக்காக மாடுகளை வெட்ட தடை விதிக்கும் உத்தரவு மக்களின் கருத்துக்களுக்கு பின்னர் மீண்டும் பரிசீலிக்கப்படும் என விலங்குகள் நலத்துறை மத்திய மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
பசு, காளை, எருமை, ஒட்டகங்களை இறைச்சிக்காக விற்கவும், வாங்கவும் மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டங்கள் நடத்தபட்டு வருகின்றன. கேரளா,மேற்கு வங்கம் உள்ளிட்ட சில மாநிலங்கள் மத்திய அரசின் இந்த உத்தரவை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளன.
இந்நிலையில், விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ள இறைச்சிக்காக மாடுகள் விற்பனை செய்ய தடை, மக்களின் உணவுப் பழக்கத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய விலங்குகள் நலத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து டெல்லியில் கருத்துத் தெரிவித்துள்ள ஹர்ஷவர்தன் கூறுகையில், இறைச்சிக்காக சந்தைகளில் மாடுகளை விற்பனை செய்யப்படுவதை தடுக்கும் விதிமுறையால் மாட்டிறைச்சி உண்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கால்நடைகளை இறைச்சிக்காக பயன்படுத்துவதை கட்டுப்படுவதற்காக கொண்டு வரப்பட்டுள்ள இந்த விதிமுறைகள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.