நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற சட்டப்படி உரிமை உள்ளது: கவர்னர் கிரண்பேடி பேட்டி

நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற சட்டப்படி உரிமை உள்ளது என புதுவை மாநில கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.
நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற சட்டப்படி உரிமை உள்ளது: கவர்னர் கிரண்பேடி பேட்டி
Published on

மாநில அரசின் பரிந்துறையில்லாமல் புதுவை சட்டமன்றத்துக்கு மத்திய அரசு பாரதிய ஜனதா நிர்வாகிகள் சாமிநாதன், சங்கர் மற்றும் செல்வ கணபதி ஆகியோரை நியமன எம்.எல். ஏ.க்களாக நியமித்துள்ளது.

மத்திய அரசு நேரடியாக நியமித்த 3 நியமன எம்.எல்.ஏ.க்களையும் சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்க மறுத்து வருகிறார். அதோடு அவர்களுக்கு எம்.எல்.ஏ.க்களுக்கு உரிய சலுகைகள் எதுவும் வழங்க முடியாது என திட்டவட்டமாக கூறியுள்ளார்.

அதே வேளையில் 3 நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு கவர்னர் கிரண்பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார். அவர்களை சபாநாயகர் அங்கீகரிக்கவும் வலியுறுத்தி வருகிறார். நியமன எம்.எல்.ஏ.க்கள் தொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில் நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம், தொகுதி மேம்பாட்டு நிதி வழங்க அரசு செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். சபாநாயகரால் ஏற்கப்படாத நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பளம் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற சட்டப்படி உரிமை உள்ளது என கவர்னர் கிரண்பேடி கூறியுள்ளார்.

புதுவை கவர்னர் மாளிகையில் பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட கிருத்துமஸ் விழா நடைபெற்றது. விழாவில் கவர்னர் கிரண்பேடி பங்கேற்று அனைவருக்கும் கிருஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்தார்.

நியமன எம்.எல்.ஏ.க்கள் சம்பளம் பெற நீதிமன்றத்தில் எந்த தடையுமில்லை. சட்டத்தின் படி அவர்கள் உரிமைகளை பெற முடியும். இது குறித்து உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலோடு தலைமைச் செயலர் உரிய ஆணையை பிறப்பித்துள்ளார்.

புதுவை மாநிலத்தில் நிதி நெருக்கடி உள்ளது. தேவையற்ற செலவினங்களை குறைத்து சேமிப்பை ஏற்படுத்தினால் நிர்வாகம் சிறப்பாக இருக்கும். பட்ஜெட்டுக்கு உட்பட்டுத்தான் செலவு செய்ய வேண்டும்.

அதனை மீறி வேறு ஏதேனும் அறிவிப்புகள் வெளியிட்டால், அதற்குரிய நிதியை உற்பத்தி செய்ய வேண்டியது நம்முடைய கடமை. இனி கடன் வெளியே வாங்க முடியாது. நம்முடைய நிதியை நாம்தான் பெறுக்கிக் கொள்ள வேண்டும்.

புதிய தலைமைச் செயலராக அஸ்வனி குமார் வந்ததைத் தொடர்ந்து கடந்த ஒரு மாதத்தில் புதுவை நிர்வாகத்தில் குறிப்பிடும் வகையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. எவருக்கும் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இல்லை. அனைவரும் விதிகளுக்கு உட்பட்டும், நடைமுறைகளைப் பின்பற்றியும் செயல்படுகிறார்கள் அதனால் தரமான நிர்வாகம் மக்களுக்கு வழங்கப்படுகிறது.

இது தொடர்ந்தால் 2018-ல் யூனியன் பிரதேசங்களில் சிறந்த யூனியன் பிரதேசமாக புதுவை விளங்கும்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com