

தஞ்சாவூர்:
சென்னை அறிவியல் மைய துணைத் தலைவர் சகாயம் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்வது மன வருத்தம் அளிக்கிறது. இளைஞர்கள் சக்தி இப்படி வீணாவதை தடுத்து அவர்களை நல்வழியில் செயலாற்ற செய்ய வேண்டும். இப்பணியில் முழுமையாக இறங்கி உள்ளோம். இதற்காக மறுவாழ்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் சமுதாயம் முறைகெட்டு செல்வது வேதனை அளிக்கிறது.
இதே பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஒன்று திரண்டு விதைப்பந்து தூவி உள்ளனர். சமுதாயத்தை நாம் குறைகூற கூடாது. சமுதாயத்தில் இருப்பவர்கள் நேர்மையாக இருந்தால் சமுதயாம் நேர்மையாக இருக்கும். அப்போது சமுதாயம் நேர்வழியில் செல்லும்.
இளைஞர்கள் அரசியலுக்கு வந்து தலைமை பொறுப்பேற்க வேண்டும். இயற்கை வளங்கள் கொள்ளை போவதை தமிழக அரசு தடுக்க வேண்டும். அதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கிரானைட் முறைகேடு பற்றி எனது மனசாட்சிபடி அரசுக்கும், கோர்ட்டுக்கும் அறிக்கை அனுப்பி உள்ளேன். அதன் படி அவர்கள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.