65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுகிறது - மத்திய அரசு முடிவு

65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. #UGC #HigherEducationCommission
65 ஆண்டுகளாக இயங்கி வரும் பல்கலைக்கழக மானியக்குழு கலைக்கப்படுகிறது - மத்திய அரசு முடிவு
Published on

புதுடெல்லி:

நாடு முழுவதும் உயர் கல்வியை ஒழுங்குபடுத்தும் உயரிய அமைப்பாக பல்கலைக்கழக மானியக்குழு (யு.ஜி.சி.) செயல்பட்டு வருகிறது. 1953-ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. கல்விசார்ந்த விஷயங்களில் மட்டுமின்றி, தகுதியுள்ள கல்லூரிகளுக்கு நிதி உதவி வழங்குவதும் இதன் பணியாகும். இதனால், கல்வித்தரம் மீது முழுக்கவனம் செலுத்த முடியாததால், பல்கலைக்கழக மானியக்குழுவை கலைத்து விட்டு, அதற்கு மாற்றாக, இந்திய உயர் கல்வி ஆணையம் என்ற புதிய அமைப்பை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இத்தகவலை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் தெரிவித்தார். இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அது தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும், அமைச்சகத்தின் இணையதளத்தில் வரைவு மசோதா வெளியிடப்பட்டுள்ளது. அதுபற்றி கல்வியாளர்கள், பொதுமக்கள் ஜூலை 7-ந் தேதி மாலை 5 மணிவரை கருத்து தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இந்த புதிய அமைப்பு, கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தும். மானிய விவகாரங்களை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கவனித்துக் கொள்ளும்.   #UGC #HigherEducationCommission

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com