பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டம்

கடந்த வருடம் படித்த மாணவர்களுக்கும், இந்த ஆண்டு மாணவர்களுக்கும் சேர்த்து விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
பிளஸ்-2 படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டம்
Published on

சென்னை:

அரசு நீட் பயிற்சிக்கு சென்ற பிளஸ்-2 மாணவர்கள் தவிர மற்ற மாணவ-மாணவிகளுக்கு கடந்த வருடம் விலையில்லா லேப்டாப் வழங்கவில்லை. கடந்த வருடம் படித்த மாணவர்களுக்கும், இந்த ஆண்டு மாணவர்களுக்கும் சேர்த்து விலையில்லா லேப்டாப் வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகத்தில் அனைத்து மாணவ-மாணவிகளும் கல்வியில் சிறந்து விளங்கிடவும், சமுதாயத்தில் உயர்ந்த நிலையை எய்திடவும், கல்வி கற்பதற்கு வறுமை ஒரு தடையாக இருக்கக்கூடாது என்ற உயரிய நோக்கத்தில் கட்டணமில்லா கல்வி, சத்துணவு, பஸ் பயண அட்டை, சைக்கிள், சீருடைகள், பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், லேப்டாப், புத்தகப்பை, காலணி ஆகியவை இடை நிற்றலை குறைக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் கடந்த ஆண்டு பிளஸ்-1 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கப்படவில்லை. அதுபோல பிளஸ்-2 முடித்த மாணவர்களுக்கு லேப்டாப் இதுவரை வழங்கப்படவில்லை.

ஆனால் 2017-2018-ம் ஆண்டு நீட் பயிற்சி மையத்தை தமிழக அரசு நடத்தியது. இந்த மையத்தில் நன்றாக படித்தவர்களுக்கு அவர்கள் கல்லூரிகளில் தங்கி படிக்க தமிழக அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்த கல்லூரிகளில் தங்கி நீட் பயிற்சி மையத்தில் படித்த அனைவருக்கும் 2017-2018-ம் ஆண்டுக்குரிய விலையில்லா லேப்டாப் வழங்கப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்த மொத்தம் 6 லட்சம் மாணவ-மாணவிகளுக்கு லேப்டாப் வழங்கப்படவேண்டும். ஆனால் 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டது.

2017-2018 பிளஸ்-2 படித்த மாணவ- மாணவிகளுக்கும், 2018-2019-ல் பிளஸ்-2 படிக்கும் மாணவ-மாணவிகளுக்கும் சேர்த்து லேப்டாப் வழங்க திட்டம் உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து கடந்த வருடம் பிளஸ்-2 படித்துவிட்டு லேப்டாப் வாங்காமல் பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கும் மாணவர்கள் கூறியதாவது:-

நாங்கள் ஏழைகள், இப்போது கல்லூரி திறந்துவிட்டது. ஆசிரியர்கள் லேப்டாப் வாங்கி வாருங்கள் என்கிறார்கள். நாங்கள் கல்வி கட்டணம் செலுத்தவே மிகவும் சிரமப்பட்டோம். எனவே இப்போது லேப்டாப் தந்தால் நன்றாக இருக்கும். இன்னும் ஒரு மாதத்திலாவது விலையில்லா லேப்டாப்பை கொடுத்தால் நல்லது.

என்ஜினீயரிங் சேர உள்ள மாணவர்கள் கூறியதாவது:-

நாங்கள் சென்னையில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தோம். நாங்கள் என்ஜினீயரிங் கலந்தாய்வில் கலந்துகொண்டு கல்லூரியை தேர்ந்து எடுத்து பாடத்தை தேர்வுசெய்யப்போகிறோம். வகுப்புகள் கண்டிப்பாக ஆகஸ்டு 15-ந்தேதி தொடங்கும். அதற்கு முன்னதாக அரசு விலையில்லா லேப்டாப் கொடுத்தால் நல்லது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #tamilnews

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com