அரசு பங்களாவில் தங்கியிருக்க அத்வானி, ஜோஷிக்கு அனுமதி - மத்திய அரசு முடிவு

அரசு பங்களாவில் தங்கியிருக்க அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
ஜோஷி, அத்வானி
ஜோஷி, அத்வானி
Published on

புதுடெல்லி:

பாராளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்களுக்கு டெல்லியில் அரசு பங்களா ஒதுக்கீடு செய்து கொடுக்கப்படும்.

எம்.பி.யாக இருக்கும் காலம் முழுவதும் அவர்கள் அந்த அரசு பங்களாவில் தங்கி இருந்து பணியாற்றலாம். எம்.பி. பதவிக்காலம் நிறைவு பெற்றதும் அரசு பங்களாவில் இருந்து வெளியேறிவிட வேண்டும்.

கடந்த தடவை எம்.பி.யாக இருந்தவர்களில் 35 பேர் இன்னமும் அரசு பங்களாவை காலி செய்யாமல் உள்ளனர். இதுதொடர்பாக மத்திய அரசு உத்தரவிட்டும் பல முன்னாள் எம்.பி.க்கள் அரசு பங்களாவை விட்டு வெளியேறவில்லை.

அரசு பங்களாவில் தங்கி இருக்கும் முன்னாள் எம்.பி.க்களில் பா.ஜனதா மூத்த தலைவர்கள் அத்வானி, முரளிமனோகர் ஜோஷி இருவரும் முக்கியமானவர்கள். அவர்கள் இருவரும் டெல்லி லுட்யன்ஸ் பகுதியில் உள்ள அரசு பங்களாவில் இருக்கிறார்கள்.

பிரிதிவி சாலையில் உள்ள அரசு பங்களாவில் அத்வானி கடந்த 1970-ம் ஆண்டு முதல் தங்கி இருக்கிறார். 91 வயதான நிலையில் அவர் கடந்த எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை.

அதுபோல ரைசினா சாலையில் உள்ள அரசு பங்களாவில் நீண்ட ஆண்டுகளாக தங்கி இருக்கும் முரளி மனோகர் ஜோஷியும் 85 வயது காரணமாக எம்.பி. தேர்தலில் போட்டியிடவில்லை. என்றாலும் அவர்கள் இருவரையும் அரசு பங்களாவில் இருந்து வெளியேற்ற கூடாது என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அத்வானி, முரளி மனோகர் ஜோஷி இருவரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் அரசு பங்களாவில் தொடர்ந்து வசிக்க பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார். அவர்கள் இருவருக்கும் சிறப்பு அனுமதி அளிக்கும் உத்தரவை உள்துறை விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற முன்னாள் எம்.பி.க்கள் அனைவரையும் அரசு பங்களாவில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com