பிரிவினை-வன்முறைக்கு சீமான் வித்திடுகிறார்: கோபண்ணா சாடல்

தமிழகத்தில் பிரிவினைக்கும், வன்முறைக்கும் வித்திடும் வகையில் சீமான் செயல்படுகிறார் என்று காங்கிரஸ் ஊடக பிரிவின் தலைவர் கோபண்ணா தெரிவித்துள்ளார்.
கோபண்ணா
கோபண்ணா
Published on

சென்னை:

ராஜீவ் காந்தி படுகொலை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துக்களை சீமான் கூறினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி புகார் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ராஜீவ் கொலை பற்றி தான் கூறிய கருத்துக்களில் இருந்து ஒரு போதும் பின் வாங்க மாட்டேன் என்று சீமான் திட்டவட்டமாக கூறியிருக்கிறார்.

மேலும் நாம் தமிழர் கட்சியை தடை செய்ய காங்கிரஸ் வலியுறுத்தி இருப்பது பற்றி கேட்ட போது தடை செய்ய முடியாது என்று பதில் அளித்தார்.

இதற்கு காங்கிரஸ் ஊடக பிரிவின் தலைவர் கோபண்ணா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:-

ராஜீவ் கொலையை நியாயப்படுத்துவதில் இருந்து அவரது மனநிலையை புரிந்து கொள்ள முடியும். அரசியல் தளத்தில் இதற்கான விலையை அவர் பெறுவார். நிச்சயம் தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

ஈவு, இரக்கமற்ற மனநிலையோடு பேசும் அவரது கருத்தை தமிழகத்தில் யாரும் ஏற்க மாட்டார்கள். இலங்கையில் தமிழர்களின் பேரழிவுக்கு காரணம் ராஜபக்சேவும், பிரபாகரனும்தான். தமிழகத்தில் பிரிவினைக்கும், வன்முறைக்கும் வித்திடும் வகையில் சீமான் செயல்படுகிறார். அதை ஒரு போதும் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

அரசியல் கட்சிகளுக்கும், தலைவர்களுக்கும் கருத்து சொல்வதற்கும் ஒரு வரையறை உண்டு. அந்த வரம்புகளையும் மீறி அவர் செயல்படுகிறார். எனவேதான் கட்சியை தடை செய்ய தேர்தல் ஆணையத்தில் புகார் செய்துள்ளோம். இடைத்தேர்தல் முடிந்ததும் வலியுறுத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com