காலே டெஸ்ட்: இலங்கையை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி

காலே டெஸ்டில் இலங்கையை 2-வது இன்னிங்சில் 245 ரன்னில் சுருட்டி 304 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அசத்தல் வெற்றியை பெற்றுள்ளது.
காலே டெஸ்ட்: இலங்கையை 304 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
Published on

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். தவான், அபிநவ் முகுந்த் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். அபிநவ் முகுந்த் 12 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவான் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தவான் 190 ரன்களும், புஜாரா 153 ரன்களும் குவித்தனர்.

அதன்பின் வந்த கேப்டன் விராட் கோலி 3 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றினாலும், ரகானே 57 ரன்னும், அஸ்வின் 47 ரன்னும், அறிமுக வீரரான ஹர்திக் பாண்டியா 50 ரன்னும் எடுக்க இந்தியா முதல் இன்னிங்சில் 600 ரன்கள் குவித்தது. இலங்கை அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர்கள் நுவன் பிரதீப், குமாரா ஆகியோர் முறையே 6, 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை 291 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக தில்ருவான் பெரேரா அவுட்டாகாமல் 92 ரன்னும், மேத்யூஸ் 83 ரன்னும் அடித்தனர். இந்திய அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட்டும், மொகமது ஷமி இரண்டு விக்கெட்டும், உமேஷ் யாதவ், அஸ்வின், ஹர்திக் பாண்டியா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

309 ரன்கள் முன்னிலைப் பெற்ற இந்தியா பாலோ-ஆன் கொடுக்காமல் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சதம் அடித்த தவான், புஜாரா முறையே 14, 15 ரன்களில் ஆட்டம் இழந்தனர். முதல் இன்னிங்சில் ஏமாற்றம் அளித்த அபிநவ் முகுந்த், கோலி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அபிநவ் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 76 ரன்களுடன் களத்தில் இருந்தார்.


அரைசதம் அடித்த டிக்வெல்லா

இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இருவரும் தொடக்கம் முதலே அடித்து விளையாடினார்கள். விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது இன்னிங்கை டிக்ளேர் செய்தது.

முதல் இன்னிங்சில் 309 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஒட்டுமொத்தமாக 349 ரன்கள் முன்னிலைப் பெற்று, இலங்கை அணியின் வெற்றிக்கு 550 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது இந்தியா.


97 ரன்கள் குவித்த கருணாரத்னே

இமாலய இலக்கை நோக்கி இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரரான உபுல் தரங்காவை 10 ரன்னில் வெளியேற்றினார் மொகமது ஷமி. அடுத்து வந்த குணதிலகாவை 2 ரன்னில் பெவிலியன் அனுப்பினார் உமேஷ் யாதவ். இதனால் இலங்கை அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுக்களை விரைவாக இழந்தது.

3-வது விக்கெட்டுக்கு கருணாரத்னேவுடன் மெண்டிஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்றது. 4-வது விக்கெட்டுக்கு 79 ரன்கள் எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. மெண்டிஸ் 36 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த மேத்யூஸை 2 ரன்னில் ஜடேஜா வெளியேற்றினார்.

ஒரு பக்கம் விக்கெட் வீழந்தாலும் மறுமுனையில் கருணாரத்னே சதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தார். அவருக்குத் துணையாக டிக்வெல்லா, தில்ருவான் பெரேரா விளையாடினார்கள்.

டிக்வெல்லா 67 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். டிக்வெல்லா அவுட்டானதும் இந்தியா வெற்றியை நெருங்கியது. கருணாரத்னே 97 ரன்கள் எடுத்த நிலையில் அஸ்வின் பந்தில் க்ளீன் போல்டாகி சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.


விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஜடேஜா

கருணாரத்னே அவுட்டாகும்போது இலங்கையின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்னாக இருந்தது. மேலும் 5 ரன்கள் எடுப்பதற்குள் இலங்கை அடுத்த இரண்டு விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 245 ரன்கள் எடுத்திருக்கும்போது அந்த அணியின் 2-வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. தில்ருவான் பெரேரா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

காயம் ஏற்பட்ட குணரத்னே, ஹெராத் ஆகியோர் பேட்டிங் செய்ய வராததால் இலங்கை 245 ரன்களில் ஆல்அவுட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

இதனால் இந்தியா 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com