தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி - ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு

தமிழகத்தில் 3400 அரசு பள்ளிகளை மூட முயற்சி நடந்து வருகிறது என ஜி.ராம கிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜி ராமகிருஷ்ணன்
ஜி ராமகிருஷ்ணன்
Published on

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட பள்ளி கல்வி பாதுகாப்பு இயக்க சிறப்பு மாநாடு இன்று நடைபெற்றது. கூட்டத்தில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் அரசு கள்ளர் சீரமைப்புத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, ஒன்றிய, நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளை பாதுகாக்க வலியுறுத்தி மாவட்டந்தோறும் கூட்டம் நடத்தி வருகிறோம். மத்திய அரசு திட்டக்கமி‌ஷனை கலைத்து விட்டு நிதி ஆயோக் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதன்மூலம் கல்வித்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 3400 அரசு பள்ளிகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அரசு பள்ளிகள் மூடப்பட்டால் மாணவர்களின் இலவச கல்வி கேள்விக்குறியாகும். எனவே அரசு பள்ளிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 2008-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 42 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்தனர்.

தற்போது 15 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே படிக் கின்றனர். ஆதிதிராவிடர் பள்ளிகளில் 2 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்கள் படித்து வந்த நிலையில் தற்போது 1 லட்சம் மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். திண்டுக்கல், தேனி, மதுரை ஆகிய மாவட்டங்களில் கள்ளர் சீரமைப்பு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததால் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனவே இந்த பள்ளிகளை தரம் உயர்த்தி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளில் இலவச கல்வி கிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com