ஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும்- ஜி. ராமகிருஷ்ணன் பேட்டி

ஆவின் பால் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
ஜி. ராமகிருஷ்ணன்
ஜி. ராமகிருஷ்ணன்
Published on

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசு தமிழகத்தின் கிராம ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை நிறைவேற்ற ரூ.5920 கோடி நிதி ஒதுக்கி இருந்தது. இதில் தமிழக அரசு ரூ.3600 கோடியை திருப்பி அனுப்பி உள்ளது. இது பொதுமக்களுக்கு செய்த மிகப்பெரிய துரோகம் ஆகும்.

தமிழக அரசு பால் விலையை உயர்த்தி உள்ளது. இதனை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி கடுமையாக எதிர்க்கிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தியிருப்பதால் பால் விலையை உயர்த்தி இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

பால் கொள்முதல் விலையை உயர்த்தும் போது, அதற்கான தொகையை மானியமாக வழங்க வேண்டும். அதை விடுத்து இச்சுமையை மக்கள் மீது ஏற்றக்கூடாது. பால் விலை உயர்வை அரசு வாபஸ் பெற வேண்டும்.

அரசு இலவச கோழி வழங்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது ஏழை பயனாளிகளுக்கு கிடைக்கவில்லை. அ.தி.மு.க.வினரே இதனால் பலன் அடைந்து வருகிறார்கள்.

இந்த திட்டம் ஏழைகளுக்கும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. குமரி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் பெண் கவுன்சிலர் லீலாபாயை வள்ளியூர் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு அவர் மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது உடலை போலீசார் அவசர, அவசரமாக பிரேத பரிசோதனை செய்து உடல் எரிக்கப்பட்டு விட்டது. இது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே இப்பிரச்சினை குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி லீலா பாய் எப்படி இறந்தார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும்.

காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியையும், உள்துறை மந்திரி அமித்ஷாவையும் கிருஷ்ணர், அர்ஜூனர் என கூறியுள்ளார். அவர்கள் இருவரும் யார்? என்பதை ரஜினிகாந்த் பின்னர் அறிந்து கொள்வார்.

இந்தியாவின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இது தவறான பொருளாதார கொள்கையினால் ஏற்பட்ட வீழ்ச்சியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com