காஷ்மீரின் இரு மாவட்டங்களில் 4 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் இன்று பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
காஷ்மீரின் இரு மாவட்டங்களில் 4 பயங்கரவாதிகள் இன்று சுட்டுக் கொல்லப்பட்டனர்
Published on

ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்துக்குட்பட்ட அவந்திபோரா பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பயங்கரவாதிகளை வேட்டையாடும் சிறப்பு பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து, அந்த பகுதியை இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிகளால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சிலமணி நேரம் நீடித்த துப்பாக்கிச் சண்டையில் அங்கு 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கொல்லப்பட்டவர்கள் ஷவுக்கத் டார், இர்பான் வார், முசாபர் ஷேக் என்பதும் இவர்கள் ஹிஸ்புல் முஜாஹிதீன் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது. இவர்களில் ஷவுக்கத் டார் மீது பல கொலை வழக்குகள் பதிவாகி போலீசார் அவனை தேடி வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ரம்ஜான் விடுமுறைக்காக வீடு திரும்பிய ராணுவ வீரர் அவுரங்கசிப் கடத்திச் சென்று கொல்லப்பட்ட வழக்கு, அக்கிப் அஹமது வாகேய் என்ற போலீஸ்காரர் கொல்லப்பட்ட வழக்கு ஆகியவற்றில் தேடப்படும் குற்றவாளியாக ஷவுக்கத் டார் அறிவிக்கப்பட்டிருந்தார்.

இதேபோல், பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள சோபோர் பகுதியில் இன்று பிற்பகல் நடைபெற்ற தேடுதல் வேட்டையில் மேலும் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.

பயங்கரவாதிகள் பதுங்கி இருந்த இடங்களில் இருந்து வெடிப்பொருட்கள் மற்றும் இந்திய அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com