

ஜூலை 17-ம் தேதி நடக்கும் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதா வேட்பாளராக ராம்நாத் கோவிந்த் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பொது வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்று எதிர்க்கட்சிகள் தெரிவித்தன. இதையடுத்து, வேட்பாளர் தேர்வு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் டெல்லியில் சமீபத்தில் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் உள்பட 17 கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் 17 கட்சி தலைவர்களும் ஒருமனதாக மக்களவை முன்னாள் சபாநாயகர் மீரா குமாரை எதிர்க்கட்சிகள் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தனர்.
இந்நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள மீரா குமாருக்கு மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா தனது ஆதரவை அளித்துள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு 40 எம்.எல்.ஏ.க்களும், 3 எம்.பி.க்களும் உள்ளனர்.
கர்நாடக சபாநாயகர் சங்கரமூர்த்திக்கு எதிராக கடந்த வாரம் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகவும், பா.ஜ.க.வுக்கு ஆதரவாகவும் மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளம் வாக்களித்தது.