

இஸ்லாமாபாத்:
காஷ்மீர் மக்கள் மீது இந்திய அரசு அடக்குமுறைகளை ஏவி விடுவதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். மேலும், காஷ்மீரில் நடைபெறும் அடக்குமுறைகள் தொடர்பாக உலகின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத்தில் கடந்த 13-ம் தேதி பேரணி மற்றும் கூட்டம் நடத்தினார்.
இந்த பேரணியில் இம்ரான்கானுடன் இணைந்து அந்நாட்டு வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி, கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பேரணி நடைபெற்றுக்கொண்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த சில கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் சலசலப்பு நிலவியது.
இந்நிலையில், பேரணியின் போது இம்ரான்கானுக்கு எதிராக ழுழக்கமிட்ட இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.