

ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் முக்கிய எதிர் கட்சியாக செயல்பட்டு வருவது தேசிய மாநாட்டு கட்சி. கட்சியின் தலைவராக முன்னாள் முதல் மந்திரி பரூக் அப்துல்லா செயல்பட்டு வருகிறார். இவர் கடந்த 1981 முதல் கட்சி
தலைவராக பொறுப்பேற்றார்.
ஆனால், 2002 முதல் 2009 வரை உமர் அப்துல்லா கட்சி தலைவர் பதவியை வகித்து வந்தார். இதைத்தொடர்ந்து கடந்த 2009 முதல் பரூக் அப்துல்லா கட்சி தலைவர் பதவியை வகித்து வருகிறார்.
இந்நிலையில், தேசிய மாநாட்டு கட்சியினரின் கூட்டம் ஸ்ரீநகரில் உள்ள கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.
15 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கூட்டம் என்பதால் கட்சி நிர்வாகிகள் திரண்டு வந்திருந்தனர். கூட்டத்தில் கட்சியின் தலைவராக பரூக் அப்துல்லாவும், செயல் தலைவராக உமர் அப்துல்லாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பரூக் அப்துல்லா கூறுகையில், என்னை தலைவராக தேர்வு செய்ததற்கு நன்றி. உமர் அப்துல்லாவை தலைவர் பொறுப்பேற்குமாறு கூறினேன். ஆனால் அவர் மறுத்துவிட்டார். இப்போது அவர் மறுத்தாலும் விரைவில் கட்சி தலைவர் பொறுப்பேற்று கட்சியினரை வழிநடத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.