தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும்: மந்திரி ஈசுவரப்பா

டி.கே.சிவக்குமார் வீட்டில் சி.பி.ஐ. சோதனையை நடத்திய விஷயத்தில் தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும் என்று மந்திரி ஈசுவரப்பா கூறியுள்ளார்.
ஈசுவரப்பா
ஈசுவரப்பா
Published on

கலபுரகி :

கர்நாடக பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம வளர்ச்சித்துறை மந்திரி ஈசுவரப்பா கலபுரகியில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் வீடு, அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியுள்ளது. இது அரசியல் நோக்கம் கொண்டது என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார். உப்பு தின்றவர்கள் நீர் குடித்தே ஆக வேண்டும். தவறு செய்தவர்கள் தண்டனையை அனுபவித்தே தீர வேண்டும். முதல்-மந்திரி எடியூரப்பா மீதும் ஊழல் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அவர் விசாரணையை எதிர்கொண்டு, அந்த வழக்குகளில் இருந்து நிரபராதி என்று வெளியே வந்தார். அதே போல் டி.கே.சிவக்குமார் தவறு செய்யவில்லை என்றால், விசாரணையை சந்தித்து நற்சான்றிதழ் பெற வேண்டும்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகிஆதித்யநாத் மற்றும் தேஜஸ்விசூர்யா எம்.பி. ஆகியோர் குறித்து சித்தராமையா மோசமான முறையில் கருத்துகளை தெரிவித்துள்ளார். இது அவருடைய கலாசாரத்தை வெளிக்காட்டுகிறது. காங்கிரஸ் தோல்வியை சந்தித்து வருகிறது. சாமுண்டீஸ்வரி தொகுதியில் சித்தராமையா தோல்வி அடைந்தார்.

ஆயினும் அவர் அதில் இருந்து பாடங்களை கற்றுக்கொள்ளவில்லை. இதுபோன்ற போக்கை சித்தராமையா தொடர்ந்து வெளிக்காட்டினால், காங்கிரஸ் தொடர்ந்து மூழ்கும். கர்நாடக மேல்-சபையில் காலியாக உள்ள 4 இடங்களுக்கான தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.

இவ்வாறு மந்திரி ஈசுவரப்பா கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com