கனிஷ்க் நிறுவனத்தின் ரூ.143 கோடி வைப்புத் தொகையை முடக்கியது அமலாக்கத்துறை

வங்கி மோசடி விவகாரத்தில் கனிஷ்க் நகைக்கடைக்கு சொந்தமாக இருந்த ரூ.143 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. #Kanishk
கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின்
கனிஷ்க் நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின்
Published on

சென்னை:

சென்னை, வடக்கு உஸ்மான் சாலையில் கனிஷ்க் நகைக்கடை உள்ளது. இந்த நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்டு பெரிய நகைக்கடைகளுக்கு நகைகளை சப்ளை செய்தும் வந்தது. இந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ் குமார் ஜெயின் 14 வங்கிகளில் ரூ.824 கோடி கடன் வாங்கிக்கொண்டு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக சி.பி.ஐ.க்கு, சென்னை, பாரத ஸ்டேட் வங்கி, பொதுமேலாளர் புகார் அளித்தார்.

முதலில் பாரத ஸ்டேட் வங்கியில் வங்கிக்கணக்கை தொடங்கி, இந்த வங்கியில் இவர்கள் பெற்ற கடனை வருமானமாக கொண்டு 14 வங்கிகளில் கடன் பெற்றுள்ளனர். இதுபோல் ரூ.824 கோடி கடன் பெற்றனர். இந்த கடனுக்கான வட்டித் தொகையானது சுமார் ரூ.160 கோடியாகும். இவர்கள் பெற்ற கடனுக்காக வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு எந்தவித பதிலும் அளிக்கப்படவில்லை.

இதையடுத்து அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பூபேஷ்குமார் ஜெயின், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சி.பி.ஐ.யும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்தி வருகிறது.

இந்நிலையில், அந்நிறுவனத்தின் பெயரில் வங்கியில் இருந்த 143 கோடி ரூபாய் வைப்பு தொகையை அமலாக்கத்துறை இன்று முடக்கியுள்ளது. முன்னதாக, இரு நாட்களுக்கு முன்னர் காஞ்சீபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்காவில் உள்ள நடராஜபுரம் மற்றும் புக்காத்துறை கிராமங்களில் கனிஷ்க் நிறுவனத்துக்கு சொந்தமான ரூ.48 கோடி மதிப்பிலான சொத்தை அமலாக்கத்துறை முடக்கி நடவடிக்கை எடுத்திருந்தது. #Kanishk #BankFraud

X

Maalai Malar
www.maalaimalar.com