

செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் முடியனூர் ஊராட்சி அம்மாபாளையத்தை சேர்ந்தவர் அழகேசன் (வயது 50). புதுப்பாளையம் ஒன்றிய தி.மு.க. செயலாளர்.ஊராட்சி கவுன்சிலராகவும் பதவி வகித்துள்ளார்.
இவருக்கு, வாசுகி என்கிற மனைவி, 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் அருகே உள்ள, தனது நிலத்திற்கு அழகேசன் சென்றார்.
அப்போது, மின் மோட்டாருக்கு செல்லும் மின்சார வயர் வரப்பில் அறுந்து கிடந்தது. இதனை கவனிக்காமல் அழகேசன் மின்வயரை மிதித்துவிட்டார். மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார்.
தகவலறிந்ததும், பாய்ச்சல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பலியான அழகேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக, செங்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மின்சாரம் தாக்கியதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் பலியான சம்பவம், உறவினர்கள் மற்றும் தி.மு.க.வினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.